Friday, December 31, 2010

வண்ணங்கள் நோக்கையிலே

வண்ண வண்ண புடவைகள்
விரித்துக் காட்டுவது
கடைக்காரர்.
கடைக்காரர் காட்டுவதோ
வரையறையுள்ள எண்ணிக்கை

வானத்தில் இயற்கை கோலமிடும்
வடிவங்கள் ஆயிரமாயிரம்.
இவற்றுக்கு வரையறை
இல்லை ஆனால் வண்ணம் உண்டு

வண்ணங்கள் நோக்கையிலே
நெஞ்சுக்குள் ஓடுதம்மா சந்தோஷ ஆறு
மூளை எதற்குத்தான்
அத்தனை குதிக்கிறதோ
வண்ணங்களை நோக்கின்

வண்ண வண்ண கலர்ப் பொடி
வித விதமாப் பிறந்த ரங்கோலிக் கோலம்
சிதறும் மத்தாப்பு
சிறுவர் விளையாடும் கோலி
பிறந்த நாள் விழாவை அழகித்த வண்ணக் காகிதம்

நீல நிற கடல்,
செந்நிற வானம்,
மறையும் சூரியன்

பச்சைப் பசேல் என்ற புல்தரை
பலவித வண்ண மலர்கள்
பறக்கும் பட்டாம்பூச்சிகள்

இவை வண்ணங்களின்
வெளிப்பாடுகள்
நெஞ்சத்தை
மகிழ்ச்சிக் கூரைக்கு
ஏற்றிச் செல்லும்
ஏணிப் படிகள்

வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்

வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்

ஆற்றாமை

என்ன திமிர் உனக்கு
மகளைப் பார்த்து சொல்லுகின்ற தந்தை

திமிர் என்பது பல சமயம்
தவறாக புரிந்து கொள்ளப் படுவதும்

இன்றைய குழந்தைகள் திமிராகப்
பேசுவது போல் தோன்றும் மாயையும்

ஆற்றாமையாலும் பரபரப்பினாலும்
நடத்தை திமிராகத் தோற்றமளிப்பதும்

கண்ணுக்கு புலப்படாத கண்ணுக்கு
புலப்படவேண்டிய விஷயமாயிற்றே இன்று

கோமாளித்தனம்

கோமாளிகள் சர்கசிற்கு மட்டும் அல்ல
நல்ல ஒரு குடும்பத்திற்கும் தான்

சின்னஞ் சிறு சிறுவர்களாய் நாம்
அறிந்திருந்தோம் கோமாளித்தனம்

சோகத்தில் தள்ளாடும் தாயையும்
சிரிக்க வைப்பாய்
நீ தற்காலிக கோமாளி ஆகி

மனம் எவ்வளவு இறுகி இருந்தாலும்
இறகு போல் லேசாகி விட
செய்திடுவாய் கோமாளித்தனம்

சிரிப்பு நடிகர்களுக்கு மட்டுமா கோமாளித்தனம்?
அப்படியென்றால் நாமும் சிரிப்பு நடிகர்கள்
ஆகலாமே

Wednesday, December 29, 2010

பிளாக்கர்.காமில் புத்தாண்டு

உயிரினங்கள் ஒன்றை ஒன்றை வாழ்த்திடும் நேரம்
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ

ஒன்றை ஒன்றை வாழ்த்திடும் பதிவர்கள் பிளாக்கர்.காமில்
கடவுளின் தூதர்கள் ஆனரோ?

மேலும் வாழ்த்துக்கள் தொடர்ந்து, மலர்ந்து விரியும்
வருகின்ற புத்தாண்டில் என்று நம்பி நலம் பெற
வாழ்த்துகிறேன்

பாலைவனமும் சோலைவனமும்

நமக்கு அநியாயம் செய்கின்ற
நண்பனை, உடன் பிறந்தோனை,
மற்றும் அயலானை
அறிந்து கொள்
பாசம் வைத்திருக்கும்
உயிர் நம் மீது அடிமனதில்

உண்மை புரியும்
காலம் கடந்த பின்
இத்தகைய மனிதரை
மீண்டும் நட்பு செய்யத்
துவங்கும் போது

உண்மையை அறிந்து
கொண்டால்
காலம் கடப்பதற்கு முன்னே
சாந்தமும்
உன்னை காந்தமெனக்
கட்டிக் கொள்ளும்

அன்பு வைக்க யாரும் இல்லை
நம்மீது
நினைக்கும் போது விரக்தி
என்ற விஷயம் தாக்குகின்றது
நாகப் பாம்பின் விஷம் போல

சிலரின் அநியாயக் குறைகளினால்
குறைகளே அதிகம் வாழ்வில்
என்று குமைத்து வாழும் சிலர்
பாலைவனமும் சோலைவனமாகும்
பகைவனையும் நேசிப்பதாலே
அறிந்திலரோ இவர்?

Tuesday, December 28, 2010

உயிரைப் பறித்த பின்பு

பத்து மாதம் சுமந்து
பல சவால்களுடன்
பிரசவித்து

பச்சைக் குழந்தைக்குப் பாலூட்டி
பல சௌகரியங்களை பணயமாக்கி

பாலும் பழமும்
நாளுக்குப் பல முறை
நாவிற் சுவைக்க வைத்து

பாலகனை வளர்த்தெடுத்து
கட்டிய அந்தக் கூட்டில்
வினையும் விதியும் ஒன்றாகி
பாலகன் இறைவனிடம்
செல்கின்றான்

பெற்றவளோ
கூட்டை கலைத்திட்டாய்
எனக் கேட்டு உருகுகிறாள்
என் உயிரைப் பறித்த பின்பும்
எதற்காக எதனையும்
கொண்டாட வேணும்
மைந்தனின் குரலும் இல்லை
கும்மாளமும் இல்லை
எனக்கு இனி என் குரல்
வேண்டாம் என மௌனக்குரல்
எழுப்பினாள்

திருநாட்கள்

தலை துவட்டி விடுவாளோ
ஏங்கியது தவிர

நிறைய சமைத்துப் போடுவாளோ
ஏங்கிய காலம் பிறந்து விட்டது

பெண்ணிற்கு ஏனோ தனியாய் சமைக்க
போர் அடிக்கத் துவங்கியது

சமையலில் சுருக்கம்,
குளிர் சாதனப் பெட்டியில் நெருக்கம்
என்றாயிற்று

தனக்கு யாரோ சமைத்துப் போடுவாரோ
பெண் ஏங்கும் காலம் பிறந்தது

சமையலுக்கு ஆள் என்ற விஷயம்
தொடங்கியது

கணவன் தான் சமைத்த
உணவை ரசித்து உண்ணும் நேரம்
சில நாட்களாய் மட்டும் இருந்தும்
அவை திருநாட்கள் என்றே அவள்
திடமாய் நினைக்கின்றாள்

சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

ஞானத்தை நாற்பது வயதிலே
அள்ளித் தந்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அம்மை அப்பனை
யாரெனக் காட்டிக் கொடுத்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அத்வைதம் பிடிக்க வைத்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அருள் பரவி இருக்கும் இடம் எங்கும்
சுவாமி மலை
நான் இருக்கும் இடம்
சுவாமி மலை

சுவாமி மலை முருகா
உனக்கு என் வந்தனம்

உன்னைப் பற்றி

எனை வாழ வைத்த அழகு பூபதி
எனை ஆள வந்த ஆதி
எனைக் கவர வந்த கார்முகிலன்
எனைப் பாட வைத்த பாடலாசிரியர்
எனைப் பறக்க வைத்த வானம்
எனை அமைதிப் படுத்தும் அரு மருந்து
எனைத் தூங்க வைத்த தாலாட்டு
எனைத் தாயாக்கிய தர்மப் பிரபு
என்னுடன் ஆட வந்த ஆடலரசன்
என்னுடன் வாழ வந்த வரதன்

சுற்றியிருக்கும் ஆடவருக்கு

மௌன மாலையை அணிந்தபோதும்
என் மீது உனக்கு ஏன் கவனம்?

கண்ணுக்குள் சிந்தாத பார்வைக்காக
ஏங்கிக் கிடக்கவும் தெரியுமா உனக்கு

மௌனத்திலிருந்து விலகிய கணங்கள்
ஒன்று இரண்டு ஆயினும்
அதனில் ஓராயிரம்
அர்த்தங்கள்
புரிந்து கொண்ட
நீ

என் மௌனம்
கலைக்க முயற்சிக்கிறாய்

சிந்தாதப் பார்வையின் மத்தியில்
சிந்திய ஒரிருப் பார்வையை
பாவையென புரிந்து கொண்ட நீ

என் பார்வையை
மாற்ற முயற்சிக்கிறாய்

என்னை மேலும்
அழகு படுத்த நினைக்கிறாய்

உனக்கு மௌனமாய்
என் வந்தனம்
நீ இருக்கும் இடம்
நாளும் எனக்கு நந்தவனம்

நல்லதை மட்டும் கண்டிருந்தால்

நல் எண்ணங்கள் மட்டுமே கொண்டிருந்தால்
என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடிய
துன்பங்கள் என்னைத் தொடாமலே ஓடிப்
போயிருக்கும்

நல்லதை மட்டும் கண்டிருந்தால்
என்னை சோர்வடையச் செய்த சோகங்களும்
சோர்ந்து போயிருக்கும்

இருப்பதை மட்டுமே நினைத்திருந்தால்
என்னை வாட்டி வைத்த எண்ணங்களும்
வாடிப் போயிருக்கும்

விடியலுக்கு நேற்றை விட இன்று
ஒன்றும் குறைந்து போக வில்லை
நாமே நமக்கு நல்ல நாட்களாய் விடிவோம்

வாழ்க நல் எண்ணங்கள்
வளர்க நற்சிந்தனை

புனித புத்தாண்டு

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
மந்திரம் சொன்ன தந்தையின் அருளை
மற்ற நல்லவர் சொல்லில் காணக்
கற்றுக் கொடுத்த கதிர்காமத்துறை
கதிர்வேல் முருகா உன்னைக்
கணக்காய் பாடிட காலையில்
எழுப்பு கோழி கூவும் முன்னே

கந்தர் சஷ்டி கவசமதை வருகின்ற
புத்தாண்டில் புலன்களோடு ஒன்றாய்
புகுத்தி விடு

புகுந்த கவசமதை புனிதமாகப்
புரிந்து கொள்ள புதிதாய்
எனக்குள் புதுமை புகட்டு

புரியாத விஷயம் தனை
புரிய வைத்து உன்
புகழ் காக்க
புனிதப் பயணம்
புறப்பட
புதிதாய் என்னை ஆயத்தமாக்கு

புனித புத்தாண்டாய்
அமைந்திடவே புதிதாய்
என்னை வாழ்த்திடு

உன் பாதம்
தாள் பணிந்தேன்
புனித புத்தாண்டில்

என் மீது குதித்து விட்டாயே

என்னிடம் பிடித்தது என்ன உனக்கு
தவளை கேட்டது

குதிக்கும் பாணி உன்னுடையது
இனம் தெரியாத மகிழ்ச்சியும்
வியப்பும் என்னுடையது

என்னை உன் மனதில் நிறைத்தது என்ன
அடுத்து தவளை கேட்டது

தூங்கிப் போக இன்னும் ஒரு நிமிடமே இருக்க
இயற்கையை ஒலிபரப்பும் உன் சத்தம்
தாலாட்டி தூங்க வைத்தது என்னை

தினமும் என்னை வந்து
என் வீட்டில் பார்க்கின்றாயே
அது எதற்கு தவளை கேட்டது

உன்னிடம் உள்ள ஈர்ப்பு எனக்கு என்
அன்னையிடத்துக் கூட இல்லையே அதனால்

உன் வீட்டிற்கு நான் வந்த போது
அலறி விட்டாயே அது ஏன் கேட்டது தவளை

நீ ரொம்ப மோசம் அனுமதி இல்லாமல்
என் மீது குதித்து விட்டாயே?

நீ மட்டும் என்ன அனுமதி இன்றி
எனக்கு மிக அருகில் கல் எடுத்து வீசி
என்னைத் திகிலடைய செய்து விட்டாயே

நம்ம ரெண்டு பேரும் நண்பர்கள்
இதெல்லாம் சகஜம் என்றே நினைக்கத்
தோணுகிறது. நான் வளர்ந்ததும்
என்னை வந்து பார்ப்பாயா?

வாராயோ விளையாட

அன்பை உடலோடு உடலாக
அணைத்துக் கொண்டேன்

அன்பு கேட்டது என்னை நீ
அதிகம் நேசிக்கின்றாயே ஏன்?

பாலைவனத்தை நொடியில்
பசுஞ்சோலை ஆக்குகிறாயே
அதனால்

பணத்திற்காக என்னை விட்டுக் கொடுப்பாயா
அன்பு கேட்டது என்னை

பணமே எனக்கு உன்னை வெளிப்படுத்தத் தான்
உனக்குத் தடையான பணத்தை விட்டு விலகவும்
தயங்கேன் நான்

என்னை கௌவரிக்க கண்களில் கவி பேசணும்
என அறிந்தீரா
அன்பு கேட்டது என்னை

நீ என்னிடம் உறைந்து மட்டும்
கிடக்கின்றாயே ஆழமாக
கண் பேசும் விளையாட்டுக்கு
வர மாட்டேன் என்கிறாயே
பல சமயம்
உன்னைக் கோபித்து பலன் ஏதும் இல்லை எனக்கு
இருந்தும்
உன்னைக் கோபித்துக் கொள்ளத்தான் போகிறேன்
விளையாட வர வில்லை என்று

Monday, December 27, 2010

மூளை விநோதம்

பச்சை சிகப்பு கலரை முதன் முதலில்
கற்றுக் கொண்ட அந்த கலர் பட
புத்தகம் இன்று நினைவிற்கு வருகிறது

முதல் வகுப்பில் என்று நினைக்கிறேன்

மனக் கணக்குகளில் பெயர் போன
நான் வாய்பாடுகளையும் சுலபமாக
சரியாகக் கற்றுக் கொண்டதில் அதிசயம்
ஒன்றும் இல்லை

தமிழில் ஒப்பித்தல் போட்டியில்
வருடா வருடம்
பரிசு பெற்றதனால் தான்
இன்று கவி எழுத எனக்கு
விருப்பமோ?

ஆங்கிலம், கணிதம் இவற்றை
தந்தை சொல்லிக் கொடுத்த விதமே
தனி

முதல் ரான்க் எடுத்ததற்கு தனி
பாராட்டுக்கள். வேகமாகப்
புரிந்து கொண்டதற்கு தனி
பாராட்டுக்கள் தந்தையிடமிருந்து

பரிசுப் புத்தகங்களை
வீட்டில் கொட்டிய
நினைவும் நீங்கவில்லை

பனிரெண்டாம் வகுப்பிலும்
நல்ல மதிப்பெண் எடுத்தாயிற்று

பொறியியல் கல்லூரி முடித்து
நல்ல வேலையிலும் அமர்ந்தாயிற்று

அலுவலகத்தில் பலரைப் போல
துரிதமாக வேலையை
முடிக்க வில்லையே என்ற
ஆதங்கம் மட்டும் விலக வில்லை

கவி எழுத ஒரு மூளை
அலுவலகத்தில் வேலை பார்க்க வேறொரு
மூளையா? இந்த மூளையின் விநோதம்
எனக்குப் பிடிபட வில்லை

நான் சொல்வது உங்களில்
எவருக்காவது பிடிபடுதா
என்று பார்ப்போம்

கண்ணாமூச்சி

அடுத்த வீட்டுப் பொடியன்களுடன்
விளையாடிய கண்ணாமூச்சி
இந்த காலத்தில் ஏனுங்க
காணாமபோச்சு

கண்ணை மூடிக்கொண்டு தொட்ட
அந்த பால்ய வயதுத் தோழனின்
நட்பு ஆழமாக நெஞ்சில் பதிஞ்சு போச்சு

பதிஞ்சு போன நட்பை மீண்டும்
பயிராய் வளர்த்திடவே
முகவரி கிடைச்சு போச்சு

இனி என்ன அன்பும் பாசமும்
அள்ளிக் கொடுத்திட்டாப் போச்சு

முப்பதில் விளையாடினேன்
கண்ணாமூச்சி மூன்றாய் பதிமூன்றாய்
மனதுமாச்சு

நாற்பதில் விளையாடினேன்
கண்ணாமூச்சி நான்காய் பதினான்காய்
மனதுமாச்சு

கண்ணாமூச்சி விளையாட
வயசில்லையப்பா
விளையாண்டு பார்த்தா
வயசும் பின்னே ஓடிடுமப்பா

வாருங்கள் விளையாடுவோம்
கண்ணாமூச்சி

நாடகம்

மன நோயால்

முறைத்து முறைத்து
பார்த்த நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
பெற்றவர்களே

உரைத்து உரைத்துப்
பேசிய நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
உடன் பிறந்தவர்களே

விறைத்து விறைத்து
பார்த்த நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
விருந்தாளிகளே

எரித்து எரித்து
எரிச்சலிட்ட நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
அன்புத் தோழர்களே

மன நோயென்ற
நாடகத்தை
நடத்திய
நடிப்புக்காக

மனதில் பரிகாரம்
தேடும் என்னை

வலி எடுத்து விட்டது

வினை தீர்க்கும் விநாயகனே
விவேகக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

மருதமலை மாமணியே முருகையா
மகர தீபக் குழந்தையைக் கருவில் கொடுத்தாய்

கருணைத் தேவன் கண்ணா
கருணைக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

நீதி தவறா நீலகண்டா
நீதிக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

வேதம் அருளிய வேங்கடவா
வேள்விக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

காமம் படைத்த மன்மதா
காமக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

உவப்பளிக்கும் உற்சவ மூர்த்தியே
உற்சாகக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

இத்தனையும் கொடுத்த நீ
குழந்தைகளை
என்றைக்கு பிரசவிக்கப்
போகிறாய்
வலி எடுத்து விட்டது
வந்து விடு விரைவில்

ஆயிரம் கணவர்கள்

விந்தினால் பெற்றேன்
ஒரு குழந்தை

அன்பினால் பெற்றேன்
கவிக் குழந்தை

ஞானத்தினால் பெற்றேன்
உலக மக்களை குழந்தையென

ஆயிரம் கணவர்கள்
சேர்ந்திங்கு
பரிசளித்தனர்
ஆயிரம்
குழந்தைகள்

நான் கண்ட
விந்தில்லாக் கணவர்கள்

Sunday, December 26, 2010

நாற்பதின் விவேகம்

ஒரு படி சோகம்
ஒரு படி மகிழ்ச்சி

கடந்தது ரெண்டு வருடம்

ரெண்டு படி சோகம்
ரெண்டு படி மகிழ்ச்சி

கடந்தது நாலு வருடம்

நாலு படி சோகம்
நாலு படி மகிழ்ச்சி

கடந்தது எட்டு வருடம்

ஐந்து படி சோகம்
ஐந்து படி மகிழ்ச்சி

கடந்தது பத்து வருடம்

வருடங்கள் கடந்தது
பருவங்கள் கடந்தது
பெண்ணுக்கு பருவம் நாற்பது

பன்னிரண்டு படி சோகமும்
பன்னிரண்டு படி மகிழ்ச்சியும்
இருபத்திநாலும் மகிழ்ச்சி ஆயிற்றே
அது என்ன மாயம்
நாற்பதின் விவேகம்

எதற்கும் ஏங்க வேண்டாம்

கல்யாண வீட்டு ரசத்தையும்
கோவில் பொங்கலையும்
சாப்பாட்டுக் கடையில்
கண்டால்

காட்டில் ஆடும் மயிலையும்
கானம் பாடும் குயிலையும்
தொலைக்காட்சியில்
கண்டு களித்தால்

கம்மாய்த் தண்ணீரையும்
கடல் நீரையும்
நீச்சல் குளத்தில்
கண்டு களித்தால்

ஆட்டுக் குட்டியின் அழகையும்
ஆட்டின் மிருதுவான தோலையும்
மனிதக் குழந்தையிடம்
கண்டு கொண்டால்

பழனி கோயிலையும்
பழனியில் பலர் இழுக்கும் தேரையும்
பக்கத்து ஊர் கோவிலில்
கண்டு உணர்ந்தால்

பலர் விரும்பும் திருவிழாவையும்
பலர் ரசிக்கும் கலை விழாவையும்
நாளும் பள்ளிக் கூட அறையில்
கண்டால்

எதற்கும் ஏங்க வேண்டாம் இனி உலகில்
எதற்கும் ஏங்க வேண்டாம் இனி உலகில்

உன்னாலும் முடியும்

இனிப்பிருந்தும் எடுத்துக் கொள்ளாத
மௌன ரிஷி போல் வாழ்ந்து வந்த
நான் கற்றுக் கொண்ட தத்துவங்கள்

பருவ வயதின் இன்பங்கள் எத்தனை
இருந்தும் குழந்தை பருவத்து நாட்கள்
விசேஷமாகத் தெரியும் கோலம் என்ன

கண்ணுக்கு அழகாய் கவர்ந்திழுக்க சகலமும் இருக்க
கடந்து சென்ற கணங்களை திரும்பிப் பார்க்கும்
நினைவுகள் விசேஷமாகத் தெரியும் கோலம் என்ன

மனம், எல்லாம் மனம் அது விசேடமானது,
விநோதமானது விவரமானது விசாலமானது
வீம்பும் அதற்குத் தெரியும்
விந்தையும் அதற்குத் தெரியும்

உன்னுடைய பொழுதில் பாதி மற்றவரை
இன்பப் படுத்துவதில் வைத்துக் கொள்
மீதம் பாதியை உன்னை இன்பப் படுத்த
வைத்துக் கொள் இனிமையான வாழ்வைக்
காண்பாய் என்றேத் தோணுகிறது

முதலில் அம்மாவின் அன்பை
முழுமையாக புரிந்து கொள்
அம்மாவின் அன்பை அருகில்
உள்ளவனிடம் காணக் கற்றுக் கொள்
அம்மாவின் கருணையை
உன் குழந்தையிடமிருந்தும் நீ பெற்றுக் கொள்
நான் ஒரு சராசரி மனுஷி என்னால்
இது முடியும் என்றால்
உன்னாலும் முடியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா
உன்னைக் காணும் இன்பம் தோணுதடி
நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
வேண்டியவர் தம்மை காண
முடியுமடி நந்தலாலா

பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப் போல் பாவை தெரியுதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
பரந்த உள்ளங்களின் உருவம்
தோணுதய்யா

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அன்பும் அவ்விதமே எவ்விடத்தும் எவரிடத்தும்
உறைந்து கிடக்கும்

அநியாயங்களைப் பற்றி
நினைப்பதை ஸ்பாம் என்று முத்திரையிட்டு
நல்லவையே நினைத்தால் அகிலமும்
உன்னால் பயனடையும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதிலும் கூன் குருடு செவிடு இல்லாமல்
பிறத்தல் அரிது

அரிது அரிது பிழைத்திருக்கும் கணங்கள்
எல்லாம் கை கால் சுகமென்பது
அதிலும் வலிமையான கை கால் என்பது

இப்படியிருக்க உன் அமைதிக்கும்
வலிமைக்கும் தெளிவிற்கும் ஏது பஞ்சம்
எல்லாம் அந்த மனதை கட்டுக்குள்
வைப்பதில் கொஞ்சம்

Saturday, December 25, 2010

கிராமத்தில்

அப்பாவின் சிறிய கிராமம்
நான் விரும்பிய, விரும்பும்,
விரும்பப் போகும் கிராமம்

லாந்தர் விளக்கின் மங்கலான ஒளி
கூடத்தில் சாய்த்து வைக்கப் பட்ட ஏணி

சன்னல் இல்லாத சமையல் அறை
சமையல் அறைக்குள் குளித்தல்

அதிக ருசியுள்ள பருப்பு சாதம்
அதிக ருசியுள்ள செக்கு எண்ணெய்

சுவையோ சுவை கொண்ட சேவு
ஊரில் இறங்கியதும் குடித்த சோடா

கதவோரம் விளையாடிய தாயம்
கல் மேடையில் ஆடிய சதுரங்கம்

வீட்டு மாடத்தில் ஓடும் ஆட்டுக் குட்டிகள்
தாத்தாவிற்கு பால் தரும் வளர்ந்த ஆடு

நாங்கள் துணி துவைத்த
கம்மாய் கரைப் படிகள்

மீன் பிடிக்க உதவிய கம்மாய்கள்
எருமை குளித்த கம்மாய்கள்

ஆண்கள் குளித்த கிணற்றடி
ஆள் அரவமற்ற காடு

காட்டில் பச்சை மிளகாய் செடிகள்
கருவேல முள் மரங்கள்

தாண்டக் கூடிய கூரைகள்
தானியக் குவியல்கள்

கொட்டகையில் கூடையில் தூங்கும் கோழிகள்
அணி வகுக்கும் கோழிக் குஞ்சுகள்

திருவிழாக் காலத்தில் கரகாட்டம்
பொங்கல் காலத்தில் கலை நிகழ்ச்சி

கும்பாபிசேகமன்று கோலாட்டம்
கண்ணைக் கசக்க வைத்த அடுப்புப் புகை

பால் தந்த மாட்டுக் கொட்டகை
பல இடத்தில் வைக்கோற்போர்

மாவு இடித்துத் தரும் அத்தை
மாவாட்டும் பாட்டி

அடுத்த வீட்டு தோழியர்
அடுத்த வீதி பெரிய தாத்தா

இவையெல்லாம் என் மனதிற்குள்
அட்டையாய் ஒட்டிக் கொண்டது
அவற்றை மீண்டும் அசை போட வாய்ப்பு
கிடைத்தது அமெரிக்காவில்

ஐம்பது வருடமான எங்கள் வீட்டில்
நான் வேண்டுமென்றே லாந்தர் விளக்கு போல
பல்பை டிம் செய்கிறேன் அவ்வப்போது
வேண்டுமென்றே வைக்கோற்போர்
தேடி அலைகிறேன் அவ்வப்போது

மனமிருந்தால் பட்டணத்தையும்
கிராமம் ஆக்கலாம்

வாழ்க வையகம்

அன்றொரு நாள் அக்கம் பக்கத்து
மாமாக்கள் சமைத்துத் தந்த
அந்த கோவில் பொங்கலை
வரிசையில் அமர்ந்து
உண்ட காலத்தில்
அறிந்திருக்கவில்லை
வாழ்க்கையின் ரகசியத்தை

எனக்குத் தெரிந்ததெல்லாம்
நல்ல நல்ல மாமாக்கள்
என் விளையாட்டுத் தோழர்களின்
தந்தை மார்கள்

கோவிலில் விஷேசம் என்றால்
குழந்தைகளாகிய நாங்கள்
மட்டும் தவறாது சென்று
பூஜையில் கலந்து
பொங்கல் சாப்பிடுவோம்

மாட்டுப் பொங்கல் என்றால், அவியலும்
வெண்பொங்கலும் அளிப்பார்கள்
கோவிலில்

குழந்தையாய் உண்ட பொங்கலின்
மணமும் சுவையும் இன்னும்
மனதை விட்டு மறைய வில்லை

ஒன்றாய்க் கூடும் மக்கள் சந்திப்பில்
தெய்வ அருள் மௌனமாய் ஒளிரும்
கோவிலானாலும் சந்தையானாலும்
அன்றானாலும் இன்றானாலும்

நம் மனதை தக்கபடி வைத்துக்
கொண்டோமானால் இந்த அவசர
உலகில் கூட இந்த உண்மையைக்
காண முடியும்

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

நமக்குள்ளே தான் இறைவன்

நமக்குள்ளே தான் இறைவன்
ஆட்டி வைக்கும் நாமே தான் இறைவன்- அந்த
துணைவருக்கும் அனைவருக்கும் அவர்க்குள்ளே தான்
இறைவன் , உறையும் தலைவன்

நன்றாய்ப் பார்த்திடுவாய் உனக்குள்
நலமாய் நினைத்திடுவாய் தனக்குள் -நல்ல
நாட்களுக்கும் நேரத்துக்கும் நன்றாய்த் தோண்டிடுவாய்
உன்னை, மகிழ்ந்திடுவாய் உள்ளே

தூய்மையுமே நிரப்பிடுவாய் உனக்குள்
தூய அன்பையுமே பரப்பிடுவாய் அவர்க்குள் -நல்ல
சொற்களுக்கும் கவிகளுக்கும் இடையே வைத்திடுவாய்
உன்னை, மகிழ்ந்திடுவாய் உள்ளே

பண்பையுமே அன்பையுமே நம்பு
கற்றதுமே மற்றதுமே தெம்பு - நம்மைப்
பெற்றவரும் மற்றவரும் மகிழ எழுதிடுவாய்
காவடி சிந்து, ஓரடி நீந்து

அடி அடியாய் அடி வைப்பாய் நீயும்
படிப படியாய் பழகிடுவாய் நாளும் - அந்த
பக்குவமும், தத்துவமும் என்றும்
கற்றிடுவாய் அங்கும், உலகெங்கும்

கற்றவற்றை மற்றவரிடம் சொல்ல
கல்லாததை கேட்டறிந்து கொள்ள - நாளும்
புலன்களையும் கண்களையும் கொண்டு
நடத்திடுவாய் நாடகம் ஒன்று, விரைவாய் இன்று

கற்றுத் தந்த நல்லவரை வணங்கு
நல்லவரின் துணை கூட வணங்கு - பலர்
கூறுவதற்கும் சேருவதற்கும் நல்ல
வழியொன்றை அமைப்பாய் , வழி விடுவாய்

தூய அன்பு

காதலை மறப்பதை மறைப்பதை மறப்போம்
அதாவது வெளிப்படுத்துவோம்

மண்ணில் உள்ள அனைவரையும்
காதலிப்போம் தூய அன்பினால்

காதலித்த அன்புள்ளங்களின் நன்மை
கருதுவோம் நாளும்

இயற்கையைக் காதலிப்போம்
இறைவனைக் காதலிப்போம்

கலையைக் காதலிப்போம்
கலை மானைக் காதலிப்போம்

அன்பினாலே அடுக்கப்பட்ட காதலுக்கு
வரையறை ஒன்றும் உண்டோ?

நூறாவது கவி

நூறாவது கவி வரும் நேரத்தில்
வேண்டுகிறேன் நூறு முறை

நூறாவது கவி வரும் நேரத்தில்
வேண்டுகிறேன் நூறு முறை

நூறு குடும்பத்திற்கு
உதவ வேண்டும் நானும்

ஞானம் பறை சாற்ற வேண்டும்
நூறு முறை

கலைஞர்களை நண்பராய்ப் பெற வேண்டும்
நூற்றுக் கணக்கில்

நூற்றுக் கணக்கான மற்றவர்கள் துணையுடன்
நூற்றுக்கணக்கான மற்றவர்களுக்கு துணை இருக்க
வேண்டும்

நூறாவது வலைப் பதிப்பில் கருத்துரைகளை விட
அதிகமாகப் பெற வேண்டும் இறைஅன்பும், இறைவனது ஆசியும்

இறைவன் ஒளித்துக் கொண்டான்

ஆருயிர்ப் பள்ளித் தோழனே
ஸ்ரீரங்கத்தில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உன் மேல் வைக்கும் கசிவான காதலாயிற்றோ?

அலுவலகத் தோழரே
தஞ்சை பெரிய கோவிலில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உங்கள் மேல் வைக்கும் கசிவான காதலாயிற்றோ?

அன்புக் கணவனே
பழனியில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உன் மேல் வைக்கும் பக்தி ஆயிற்றோ?

அன்பு மனமே
சமயபுரத்தில் அன்று நான் பெற்ற அருள்
இன்று பலமாக நீ இருக்க காரணமோ?

அன்பார்ந்த தோழி மற்றும் தோழர்களே
கோவிலில் பெற்ற அருளை
நம்மை செப்பனிடும் கருவியாக
மாற்றிக் கொண்டால் குறைந்து போகுமா?

எங்கள் வீட்டு பூஜை அறை முருகன்
வைத்தான் பலப் பரீட்சை ஒன்று
பலமெல்லாம் முழுவதுமாய் தொலைக்க விட்டு
மீண்டும் திருப்பித் தந்தான் அவனே

உமக்கும் பலம் குறையும் போது இறைவன்
எடுத்து ஒளித்துக் கொண்டான் என்றே
ஏன் நினைக்கக் கூடாது?

எல்லாம் அவன் அருளே
எல்லாம் அவன் அருளே

பெற்றெடுக்கும் பாக்கியம்

பாலூட்டி சீராட்டி வளர்த்த என் அன்னைக்காக
தோளில் சுமந்து, படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்காக
என்னைக் கவியாக மாற்றிக் கொண்டேன் இன்று

நான் துள்ளித் திரிந்ததால் தன மனம் துள்ளப் பெற்ற
தந்தை நான் மன நோயுற்று வாழ்வில் தத்தளிததைக் கண்டு
வருத்தம் பல என்றார்

பெற்றவர் வருத்தம் தீர்ந்திடவே
நான் அவர்கள் வயிற்றில் பாலை வார்த்திட
வேண்டுமென்று கோவிலில் அந்நாளில் வேண்டியதுண்டு

மௌனமாய் வேண்டியப் பலன் இன்று
மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே
அதனையே வேண்டுகிறேன் இன்று

இறைவா, என் மேல் உனக்கு பாசம்
இருந்தால்
என் பெற்றோர் வயிற்றில்
நான் பால் வார்க்கச் செய்து விடு
என் பெற்றோர் வயிற்றில்
நான் பால் வார்க்கச் செய்து விடு

பகைவனின் பூ மனம்

கோபித்துக் கொண்டு என்ன சார் கண்டோம்
பூ போன்ற நம் மனத்தை நாமே கசக்குகிறோமோ

ஒவ்வொருவனும் அடித்தளத்தில் அடிமனதில்
உயர்ந்தவனே. அவன் சில சமயங்களில் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்

நாம் எந்தப் பருவத்தில் இருக்கிறோம் என்பது கூட
முக்கியம் விடலைப் பருவத்தில் அப்பா கூட கொடூரமானவராகத் தெரிந்தார்

அப்பருவம் தவிர மற்றொரு சமயம் அவர் மிகவும்
தங்கமானவராகவேத் தெரிந்தார்

என்னை ஏமாற்றி விட்ட பகைவன் என்று எண்ணி
என்னை நானே ஏமாற்றிய காலமும் உண்டு

மீண்டும் அந்த பகைவரில்லா பகைவனுடன் பழகும் போது
அவனும் தங்க மனமுடையவன் என்பதை அறிந்தாயிற்று

ஆக நம் மனம் எப்படி பார்க்கின்றது என்பது தான்
நம்மை ஆட்டி வைக்கிறது

நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள் அல்லவா?
அதனால் நான் உங்களுக்கு அன்புடன் கூறுவது
பகையின் காரணம் அடுத்தவரிடம் அல்ல
நம்மிடத்தே நம்மிடத்தே மட்டும்
உன்னை அவமதித்தவனையும்
உயர்ந்தவன் என்றே எண்ணிக்கொள்
முயன்றால் முடியும் இங்ஙனம்
நீயும் ஒரு பூ மனதுக் காரன் அன்றோ?

முடியவில்லை என்றால் சிறிது
தியானம் பண்ணிக்கோ. உன்னுடைய
பூ மனதை
நீயே அறிஞ்சுக்கோ

Friday, December 24, 2010

அண்ணன்

நான்கு வயதில்
மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்லி
பள்ளிக்குச் சென்ற அண்ணன்

சொல்லிச் சென்று
பேய் குறித்து அசை போட வைத்தவன் என்னை

ஆறு வயதில் கட்டெறும்பு காலில் ஏற
அம்மா என்று அலறிய என் காலிலிருந்து
விரட்டி அடித்தவன் அவன்

நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
என்று சுற்றித் திரிந்த நாளில் ஒன்றாய்ச் செய்த
குறும்புகள் எண்ண ஆரம்பித்தால் முடிவு காணாது

பட்டம் செய்ய சொல்லித் தந்ததும் அவனே
திண்ணை ஏறி குதிக்கத் தூண்டியதும் அவனே

கிரிக்கெட் கற்றுக் குடுத்ததும் அவனே
கில்லி ஆடி ஆடி ஜெயத்ததும் அவனே

செய்பொருட்கள் ஒவ்வொன்றாய்ச் செய்தான்
நானும் ஒரு நகல் செய்து முடித்தேன்

பாலத்தின் அடியில் ஊர்ந்து சென்றேன் அவனோடு
ஒன்றா இரண்டா அவ்வித நாட்கள்

பட்டாசை திருடி வெடித்து
என்னை அழ வைத்த அண்ணன்

காரணத்தோடு தான் செய்தான் போலும்
சண்டையும் இட்டோம்
சமரசமும் அடைந்தோம்

ஏனோ மனதில் சஞ்சலம் அடைந்தேன்
பருவத்தில் மலர்ந்த நான்
பள்ளியில் கூட பல சமயம் அழுதேன்

வளர்ந்ததும் ஏனோ அண்ணனிடம்
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே

பிரிந்த பிறகு மீண்டும்
தொடர்ந்தோம் கடிதத் தொடர்பில்

உடல் நிலை சரியில்லாத போதெல்லாம்
அன்பாய் கவனித்த டாக்டர் அண்ணன்
இன்று இருப்பது பதினாலாயிரம்
கிலோமீட்டருக்கு அப்பால்
இருந்தும் என் மனதில் அருகில்
இருப்பதாகவே பிரமை எனக்கு எப்பொழுதும்

பாட்டி வீடு

மாடம்
மாடத்தில் தண்ணீர்க் குழாய்
குழாயில் பல நேரம் விளையாட்டு

கூடம்
கூடமதில் மார்கோனி ரேடியோ
ரேடியோவில் சிரிக்க வைக்கும் விளம்பரம் எந்நேரமும்

சமையற் கூடம்
கூடத்தில் பாட்டி
அமர வைத்து ஆக்கித் தந்த ஆப்பமும்
ஆப்ப மணமும்

தாத்தாவின் அலுவலகக் கூடம்
கூடத்தில் ஒரு ஓரம்
சீட்டாட்டக் களம்

அடிக்கடி விருந்து
அடிக்கடி அரட்டை
அடிக்கடி அமர்க்களம்

ராத்திரி நேரம்
தயிர் சாத உருண்டை சாப்பாடு
ஒரு கல் அதிக உப்பு
நாவிற்கு சுவை
பாட்டி கை பட்ட நற் சுவை

இலையில் கால் படி காய்
சில சமயம் அழுகை வருகிறார்போல்
இருக்கும். தட்டுத் தடுமாறி
மிச்ச மீதத்தோடு சாப்பிட்டு முடிக்கலாம்

கிணற்று வாளி இறைக்கும் தண்ணீர்
கடின உழைப்பு
மாமாக்களுக்கு குளியல்
கிணற்ற்றடியில்

குளியலறை
அறைக்குள் இருந்து கூரையைத் துளைத்துச்
சென்ற தென்னை மரம்
வெண்கல அண்டா
அண்டாவில் தக தகவென்று சுடும் நீர் எப்போதும்
பாட்டி வீட்டில் மட்டுமே கிடைத்த ஹமாம் சோப்பு
அறைக்கு வெளியே வரிசையாய் மூன்று தென்னை மரம்
துணி துவைக்கும் கல்
பல் விளக்கும் சிறு சுத்தமான சாக்கடை

தீபாவளிக்கு சிறப்பு பட்டாசுகள்
மாமா கைவசம்
இலவசம்

பொங்கலுக்கு சிறப்பு கரும்பு
விருந்து. பொங்கல் வடை பாயசம்

கல்யாண காலங்களில் கண்ணை அசத்தும்
இனிப்புக்கள் தாம்பாளங்கள்

எந்நேரமும் பழ வாசம்
பூஜை அறையில்

வீட்டுத் திண்ணை
பஸ், கார், என தேர்ந்தெடுத்தல்
வேடிக்கை பார்த்து
யாருக்கு அதிகம் வந்தது
என்று எண்ணுதல்
சூப்பெரான விளையாட்டு

ஆக அம்மாவிற்கும் எனக்கும் போட்டி
யாருக்கு அதிகமாகப் பிடித்தது பாட்டி வீடு என்று

தளர்ச்சியா ?

மௌனமாய் இருப்பாயானால்
குறைத்துக் கொள்ளாதே உன்னை

தளர்ச்சி வந்த நேரம் கூட
உன்னை குறைத்துக் கொள்ளாதே

உனக்குள் உள்ள மௌனம்
ஆழமான சிந்தனைக்காரனாகத்
தூக்கி விடும் பல சமயம்

வருவது எதுவாய் இருந்தாலும்
அதை அவ்வப்படியே வேடிக்கை போல
மனதுள் செலுத்து

எவ்வித முடிவும் கணிக்கத் தேவையில்லை
இவ்வுலகம் நம்மைக் கேட்டு நகர்வதில்லை

மூளையின் பலம் உலகளவு
அங்கீகரித்தால்

உன்னை நம்புவதற்கும்
கடவுளை நம்புவதற்கும்
வித்தியாசம் இல்லை

கூட்டு இதயம்

உன் கண்
காந்தமெனக் கவர்ந்திழுப்பது
என் கண்ணை மட்டுமல்ல
முழுவதுமாக என்னை

வாய் தான் பாட்டுக்கு
ஏதோ பேசியிருக்க
கண்ணும் கூடவே
கணக்காய்ப் பேசுதே

கண் எத்தனை எத்தனை
வடிவம் எடுக்குது
நிமிடத்தில் உள்ள
ஒவ்வொரு வினாடியும்

பாவையர் கண்ணிற்கும்
வாலிபர் கண்ணிற்கும்
வித்தியாசம் இருக்க
கண் விழி கலந்த படி
பேசும் மொழி ஒன்று
காதல் மொழி

பேசும் தளம் இரண்டு
என்று எவன் சொன்னது
பேசும் தளமும் இரு இதயம் அல்ல
ஒன்றாய்க் கலந்த ஒரு கூட்டு இதயம்
அடித்துச் சொல்வேன்

தீபாவளி

ஐப்பசி மாதம் பிறப்பதற்கு
ஐந்து வாரங்கள் முன்னே

பட்டணம் சென்று
பிள்ளையாரை தரிசித்து
பின்னர் பல கடைகள்
ஏறி இறங்கி பல
தங்கமான துணி வகைகளை
ஆனந்தத்துடன் பையில் நிரப்பி

இருட்டை ஜெகஜோதியாக்கி வைத்த
அந்த வண்ண பல்புகளை ரசித்துக்
கொண்டே அடுத்த வீதி சென்று
தையலுக்கு கொடுத்து
ஆரம்பித்த எங்கள் தீபாவளிக்
கொண்டாட்டம்

ஐப்பசி இரண்டாம் வாரம் அன்னையின்
கைப்பக்குவம் என்னை மூழ்கடிக்கும் வாரம்.
ஒன்று, இரண்டு என்ற கணக்கில்லாமல்
மைசூர் பாகும் , அதிரசமும் ரசித்து ரசித்து
சுவைத்து சுவைத்து சாப்பிட்டக்
கொண்டாட்டம்

தீபாவளிக்கு ஐந்து நாட்கள் முன்னே
வரும் பேரதிசயக் கொண்டாட்டம்.
சித்தப்பனோடு பட்டாசு கடை சென்று
பட்டியலிட்ட பட்டாசு அத்தனையும்
பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து
ஆனந்தக் கண்ணீர் விடுத்து

தீபாவளிக்கு முந்தைய நாள் வரைப்
பொறுக்க முடியாமல்
நாலு நாள் முன்னமே ஒன்றிரு வெடி வெடித்து
ஆசையை நிறைவேற்றிக் கொண்டாடியக்
கொண்டாட்டம்

முந்தின நாள் இரவு, மத்தாப்புக்கள் வானம் வரை
புகையைக் கிளப்ப புஷ்வானம் கண்ணை விழுங்கிட
சங்குச் சக்கரம் காலில் ஏறி விடாமல் ஓடி ஒளிந்து கொள்ள
பரவசமடைந்த நிலையில் கம்பி மத்தாப்பை
கையிலெடுத்துச் சுழற்றி ஒளி ஓவியம் வரைந்து
பின் தூங்கப் போக மனமில்லாமல்
மத்தாப்பு வேடிக்கையை முடித்துக் கொண்டு
உறங்கிய கொண்டாட்டம்

விடியற்காலை எழுந்து, அம்மா கொடுத்த எண்ணையை
அவசர அவசரமாக உபயோகித்து மனம் முழுவதும்
பட்டாசை நினைத்துக் கொண்டே ஸ்நானம் செய்து
புதுச் சட்டையை மன மகிழ்வோடு அணிந்து
முதல் பட்டாசு நானா நீயா என்று
போட்டியிட்டுக் கொண்டு பெருமிதம் அடைந்து
காலைப் பட்டாசாக நீண்ட சரம் ஒன்றை அதிரடிக்க வைத்து
சில சமயம் காதை மூடிக் கொண்டாடிய
கொண்டாட்டம்

இருளில் அக்கம் பக்கத்து கணேஷ், முருகன் சிவா
என்ற அண்ணன் தம்பிகளோடு ரவி சந்திரன் என்ற
வேறொரு வீட்டு செல்வங்களோடு
புங்க மரத்தடியிலிருந்து
தெரு விளக்கு கம்பம் வரை கட்டிய நூலில்
ரயில் மத்தாப்பு விட்டு குதூகலித்த
கொண்டாட்டம்

பிறகு, அடடா, மணி ஆறு தானே ஆயிருக்கு,
மத்தியானம் ஆனது போலல்லவா இருக்கு
என்று உள்ளுக்குள்ளும் சத்தமாகவும் வியந்து,
பிறகு அடுத்த தவணை பலகாரத்தை உண்டு
ஒரு இட்லி மட்டுமே சாப்பிட்டு
காலைச் சிற்றுண்டியை நிறைவு செய்து மகிழ்ந்த
கொண்டாட்டம்

வயது எம்பதானாலும் மனதை விட்டு
துளி கூட அகலாது போலிருக்கே
அது தான் எங்கள் சிறந்த தீபாவளிக் கொண்டாட்டம்

இதற்கெல்லாம் பின் இருந்து அருளியது
அம்மை அப்பன் தானே என்று நினைக்கும் தருணத்தில்
மனம் நெகிழ்கிறது, உருகுகிறது.
நம் பிள்ளைக்கும் இதற்கொப்ப அனுபவங்களை
அள்ளித் தர வேண்டும் என்ற ஆவலும் உதிக்கிறது

திருமணம் என்ற பந்தம்

திருமணம் என்ற பந்தத்தில்
தெரிந்து கொண்டது முற்களும்
கற்களும் மட்டுமல்ல
பூக்களும் பழங்களும் கூட

அறிவு பூர்வமாக மட்டுமே
சிந்திப்பது குடும்ப நன்மைக்கு
ஆபத்தாகவே முடியும் என்பதும்

விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்

குடும்பத்தினரிடம் உள்ள நல்ல அம்சங்களை
மட்டுமே மனத்தால் காண வேண்டுமென்பதும்

கல கல வென்று சிரிப்பொலி கேட்க வேண்டிய இடத்தில்
கவலையும் கோபமும் மிகுந்தால் உலகின் மீதுள்ள
நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்

பல பத்து வருடங்கள் சென்ற பின் வரும் ஞானோதயம்
சில பத்து மாதங்களில் வராதிருக்க காரணம்
எது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்

தட்டிக் கொடுத்துக்கொள்

ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு
என்று பள்ளிக் காலங்களில் கிடைத்ததோ
பல பரிசுகள், கை தட்டல்கள்

சீப்பு, கண்ணாடி போன்ற ஆரம்பப் பள்ளிப்
பரிசுகள், புத்தகக் குவியலாய் உயர்நிலைப் பள்ளி
பரிசுகள்

இத்தனை பெற்றும் இன்று சராசரிக்கு கீழேயல்லவா
வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறேன்

காரணம் என்னவென்று கடைசியில் அல்லவா
தெரிய வருகிறது ?

தன்னை அறியத் தவறுபவர்கள் என்னைப் போல் ஏராளம்
இவர்களுக்கெல்லாம் கூறிக்கொள்வது தளர்ச்சி வரும்
கணத்தில் தட்டிக் கொடுத்துக்கொள் உன்னை நீயே உன் சிறப்புக்காக

தாவரங்களை நேசித்த இளவரசி

சிறிய வயதில் முருகன் படத்தில்
உற்று உற்றுப் பார்த்த அதே

நாகப் பாம்பும் மயிலும் ஒன்றாய்க்
காண முடிந்த வாசல்

சில சமயம் நரியும்
அறுபதடி தூரத்தில்

காட்டுக்குள் ஒரு நந்தவனம்
போன்றது எங்களுடைய வீடு

தோட்டத்து பழ மரங்களோ
தின்னு தின்னு என்று தாராளமாய்
அள்ளித் தந்தது
மாவையும் கொய்யாவையும்

சின்ன மா, பெரிய மா, சிவப்பு மா
என்று மூன்று வித மாவிருந்தது
எங்கள் அருமைத் தோட்டத்தில்

கொய்யாவோ கொடுத்து கொடுத்து
வள்ளல் மரம் என்று என் மனதில்
இடம் பிடித்தது

மாதுளை மரமோ நான் விரும்பி வேடிக்கை
பார்த்த கண்காட்சிப் பொருள்
அணில்கள் குடியிருந்த கோயில் ஆயிற்றே

சத்து தருகிறேன் என்று சொல்லி சொல்லி சற்றும்
எதிர்பாரா வகையில் சதா பழங்களைத் தள்ளிக்
கொண்டே இருந்தது சப்போட்டா

சீதாப் பழம் மட்டும் எனக்கு பார்வைக்கு மட்டுமே
அதன் பழம் ஏனோ நான் சாப்பிடவே இல்லை
அறியாமை எனக்கு

பழ மரங்களுடன் போட்டியிட்ட
முருங்கை மரமும், தென்னை மரங்களும்,
பல நாட்களில் எனக்கு விருந்தளித்தன

ரோஜாச் செடியோ, கல்லூரியில் என் தலையில்
அமர்ந்து கொண்டு பல மாணவர்களின் தலையைத்
திருப்பியது

இத்தனையும் விட ஆண் காக்கை பெண் காக்கையுடன்
ஜோடி சேரும் எங்கள் தோட்டத்தில்

இவற்றிற்கு எல்லாம் எஜமானியான அந்த வீட்டு
இளவரசி நான் அப்போது

இந்தக் கவியை எழுதுவதாலே, அந்த அழகிய நினைவுகளாலே
நான் காலம் கடந்து சென்றே இருப்பினும் மனதளவில்
இளவரசியாகவே இருந்து விடுகிறேனே

விலங்குகளையும் தாவரங்களையும்
நேசிக்கக் கற்றுக் கொண்ட இளவரசி

Thursday, December 23, 2010

அணையா விளக்கு

இளவரசன் என்ற பெயர் உனக்கு
அணையா விளக்கு நீ எனக்கு

காலை எழுந்ததும் நீ முதலில் பார்த்தது
என்னை நான் முதலில் பார்த்தது உன்னை

நான் கோலம் போடுவதற்கு முன்
நல்ல குதியாட்டம் போட்டாய்
என்னைப் பார்த்து

உனக்கு உணவிடும் பாக்கியம்
கிடைத்த அன்று என்னைக் கீறி விட்டாய்
பசியில் அன்று

கீறிய காயம் மறைந்து விட்டதே என்று
ஏக்கம் அடைகிறேன் நானும் இன்று

நீ அழுது கொண்டே
பேதி எடுத்த நாளன்று
புரியவில்லை எனக்கு ஏன் என்று

நல்ல வேளை நீ விரைவில்
குணம் அடைந்தாய்

உனக்கும் வந்த அதே
நோய் தான் எனக்கும் வந்தது
உன்னைக் கொன்று விட்டனர்
என்னை விட்டு வைத்தனர்

இறைவன் உனக்கு ஆறறிவு
படைக்காமல் விட்டதனாலே
விரைவில் உலகை விட்டுச்
சென்று விட்டாய்

ஆறறிவு படைத்த எனக்கு நீ ஏழாம்
அறிவொன்று புகட்டி விட்டாய்

மயிலே நீயும் நானும்

மயிலே நீ என்னைத் தேடி வந்தாய்
என் வீட்டுக்கு அன்று

நீ விரித்த தோகை கண்டு
ஒரு கணம் சிலிர்த்து விட்டு
நானும் வீட்டிற்குள் விரைந்து விட்டேன்

அம்மா சொன்னார் மயில் வரும் என்று
தெரிந்தும் தினம் நான் சென்றிடவில்லை
வாசல் பக்கம்

உன்னைக் காண நான் வாசல் வரவில்லை
கோபித்துக் கொண்டாய் அன்று

அதற்காகவே என் வீட்டுப் பக்கம்
தலை காட்டாமல் இருக்கின்றாய் இன்று.

மயிலே நீயும் என் உறவினன் சொல்வாயா
உலகுக்கு இன்று

குயிலே உன் கானம்

பதினாறு வயதில் நான்
விழித்தெழுந்ததும் கேட்ட உன் கானம்
என்னை சிறையெடுத்து விட்டதே குயிலே

இன்று நீ கூவ மாட்டாயா என்ற ஏக்கத்தில்
தோட்டத்தருகில் சென்று தனியாய்
தூங்கிப் பார்த்தேன்

உன் குரல் கேட்டு விழித்தெழுந்தேன்
பின்பு தெரிந்தது கனவில் தான்
உன் குரல் என்று

மீண்டும் வாராயோ சன்னலோரம்
வந்து என்னை விழித்தெளுப்பினால்
நாளும் நீ என் நெஞ்சோரம்

பணிவிடை செய்வோம்

காலம் காலமாக
பணிவிடை செய்வதோடு
தங்களை
சங்கிலியிட்டுக் கொண்ட
பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள்

காலப் போக்கில்
தன்னையே
தொலைத்து விட்ட நான்
பணிவிடைத தொலைத்ததும்
ஆச்சரியமில்லையே

ஆசிரியராகப் போவதே
பெண்களுக்குச்
சாலச் சிறந்தது
சொன்ன தந்தை
பணிவிடைக்கு கேடு வரும் என்று
அறிந்திருந்தாரோ அன்று

இறைவா
பணிவிடையில் பெறும் இன்பம்
செய்தவருக்கே அதிகம் என்றுணர்ந்தேன்
இன்று தொடங்கிய சின்னச் சின்னப் பணிவிடையில்

போகின்ற போக்கில் பணிவிடை என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் போகின்
அதற்கு நீயே பொறுப்பு

சிறந்தது எது

நீல வானம், வெண்ணிலா, சூரியன்
சிறந்தது எது கேள்வி எழுந்திட்டதற்கு

நீவிருவரும் என் உடலோடு ஒட்டிய
உயிராயிற்றே சொன்னது நீல வானம்

நீவிருவரும் இல்லாத பட்சம் என் குளிர்ச்சியே
உலகம் அறியாது போகும் நானல்ல சிறந்தவன்
சொன்னது வெண்ணிலா

நான் கீழே பறந்து வாழும் மனிதர்களை
எரித்து விடாமல் காப்பதே நீங்கள்
நானல்ல சிறந்தவன் என்றது சூரியன்

நாம் அனைவரும் ஒன்றின் வெளிப்பாடே
நாம் சிறந்தவர் என்றல்லாதது
நன்றல்ல

Tuesday, December 21, 2010

நாளெல்லாம் திருநாளாம்

காலைப் பனியில்
காரெடுத்துக் கிளம்பினால்
அதுவும் சாலையை ஈக்களாக
கார்கள் மொய்க்கும் முன்

சாலையும் நோக்கி
முன்னிருக்கும் கண்ணாடியில்
நீல வானையும் நோக்கினால்
அதுவும் மேகக் கூட்டம் கலையும் முன்

கூடவே காதுக்கு இதமாக
அழகிய தமிழ் பாட்டொன்று
கேட்டால்
அதுவும் இரைச்சலற்ற அமெரிக்காவில்

நாளெல்லாம் திருநாளாய்த்
துவங்கும்

புன்சிரிப்பு

சிரிக்கும்
வேளையில்
எனை
மறந்தேன்

நீ இருப்பதனாலேயே
எனை சிரிக்க
வைத்தாய்

எங்கோ
தொலைந்தேன்
சிரிக்கும் வேளையில்

சிரித்தேன்
நாளுக்கு நாற்பது
முறை

உன்னால் தானே
அத்தனையும்

அது தான்
என் காவியப்
புன்சிரிப்பு

கனவில் தரிசனம்

உள்மனதிலிருந்து
கேட்ட எனக்கு
கனவில் தரிசனம்
அளித்து விட்டாய்

நனவில்
என்றென்னை
தரிசிப்பாயோ

நான் கேட்டது
தோழிக்கு மட்டும்
நனவில்
தந்து விட்டாயே

இது என்ன நியாயம்?

கொஞ்சம் பொய் உள்ளது

பிறந்த பொழுது
உடலைக் கொடுத்த
உயிரே

இறப்பதற்கு முன்
உடலைக் காதலிக்கக்
கற்றுக் கொடுத்து விடு

உலகில் உள்ள
அனைத்தையும்
காதலித்து விட்டேன்
உன்னைத் தவிர

கொஞ்சம்
பொய் உள்ளது
நான் சொல்வதில்

சொல்வதில்
உள்ள மெயமையிடம்
ஒவ்வொரு கணமும்
நான் தஞ்சம்

வளர்ந்த குழந்தை

என்ன செய்கிறோம்
என்று அறியாமலே
அழும்
பச்சைக் குழந்தைக்கும்

அன்பைத்
தொலைத்து விட்டு
அழும்
வளர்ந்தக் குழந்தைக்கும்

அதிக வித்தியாசம் இல்லை

என்ன செய்கிறோம்
என்று அறியாமலே
சிரிக்கும்
பச்சைக் குழந்தைக்கும்

வருவதை எதிர்கொண்டு
சிரிக்கும்
வளர்ந்த குழந்தைக்கும்

அதிக வித்தியாசம் இல்லை

சொல்லப் போனால் நாம்
அனைவரும் சாகும் வரை
வளர்ந்த குழந்தை தான்

இதில் அத்வைதம்
தெரிகிறதோ
உங்களுக்கு?

உடல் காதல்

அன்பும் காதலும்
மட்டுமே
என் சொத்துக்கள்

சொத்துக்கள்
அமுதசுரபியாய்
ஆனதால்
கலக்கம்
என்னை விட்டு என்றோ
விடை கொடுத்திட்டது

புது வரவு ஒன்றுக்கு
காத்துக் கிடக்கிறேன்
ஆவலோடு

நான் காத்திருப்பது
எனக்காக
அல்ல
என் காதலில், அன்பில்
உறைந்திருக்கும்
உயிரினங்களுக்காக

அன்பைக் கொடுத்து
எதையும்
பெற முடியும்
என்று அறிந்து
கொண்டேன்

அதனால் நான்
தேடும் உடல்
காதலே நீ மிக
அருகில்
உள்ளாய்
உணருகிறேன்

மாத்திரைத் தோழர்களே

என் உயிர் மூச்சாய் கலந்து விட்ட
மாத்திரைத் தோழர்களே
நீங்கள் மாற்ற வந்தது
என் நினைவையா
என் உடலையா?

இரண்டையுமே
நீங்கள் பறித்துக்
கொண்டதால்
எனக்கு மீதம்
வெறும் காதல்
மட்டும் தான்

என்னை உங்களிடம்
தொலைத்து விட்டு
நான் படும் பாடு
அறிய வில்லையா
நீங்கள்

உங்களுக்கு
விடை கொடுக்க
அடித்தள
வேலையை
விரைவில் தொடங்குக

இல்லையென்றால்
உங்களுக்குப் பெருமை இல்லை

இல்லையென்றால்
உங்களுக்குப் பெருமை இல்லை

உடலே என்னைக் கவனி

காதலே
என் மனதில்
மட்டும் அல்லாது
உடலையும்
தொட்டுத் தாலாட்டி
விட்டுச் செல்

உடலே மனமாகிய
என் வீட்டுக்குள்
குடிபுக
உனக்கு இன்னும்
மனம் வர வில்லை
ஏன்?

உடலே
உன்னை நேசிக்க
மறந்ததற்கு
என்னை
மன்னித்து
விடு

என்னை விட்டு
தூரமாகவே
நின்று கொண்டு
இருக்கிறாய் ஏன்?

இன்றோடு
என் மீதுள்ள
பகையைத்
தொலைத்து விடு

மனதோடு
மனமாய்
கலந்து விடு

Monday, December 20, 2010

அத்வைத பித்துப் பெண்

நான் ஒரு சராசரி
மனுஷி தான்
இருந்தும் என்னுடைய
சிந்தனைகள்
உணர்வுகள்
சற்று
மாறுபட்டனவே

நூற்றுக் கணக்கான
'அவன்கள்' எனக்கு
ஒரு அவனாகவேத்
தோன்றுகின்றனர்

அவளுக்கும் அதே கதி தான்
அதாவது ரமாவாக சீதாவாக
இருப்பது அந்த ஒரு அவள்
தான்

அனைத்து மணமும் ஒரு
மணம் தான்
அனைத்து ஒலியும்
ஒரு ஒலி தான்

எனக்கு சிறுமியாக
செய்யப்பட்ட சகாயமும்
இன்றைய தினம்
செய்யப்பட்ட சகாயமும்
ஒன்று தான்

அண்ணன் எனக்கு செய்த
அநியாயமும் அயலான்
செய்த அநியாயமும்
ஒன்று தான்

அன்னையின் அன்பும்
அடுத்தவன் அன்பும்
ஒன்று தான்

அதனால் நீங்கள்
எனக்கு அத்வைத
பித்துப் பெண் என்று
தாராளமாகப்
பெயர் வைக்கலாம்

என்னுடைய வைரத்தைப் பற்றி

அவன் எனக்கு வைரம்
கொட்டிக் கிடக்கும்
வைரக் கிடங்கு

என்னைத் தாலாட்ட வந்த
தாலாட்டுத் தலைவன்
கண்ணின் இமையாய்
காவல் காக்கும் காவலன்

அவன் வீடு என்
தங்க மாளிகை
அவனுடைய குரல்
என்னைக் கவர்ந்து இழுக்கும்
குழல்

அவனுடைய தேகம்
நான் விரும்பி
விளையாடும் மைதானம்

எனினும் அவன் மனம்
எனக்கு மட்டும் தான்
என்று நான் அடம்
பிடிக்க வில்லை

பணிவிடை செய்ய
மனமிருந்தும்
செயலில் இல்லை

காதலும் பக்தியும் இருந்தால்
அதுவே போதும்
என்பது என் கருத்து
அவன் கருத்தும் கூட

கவியின் மறு பக்கம்

ஆழ்ந்த சிந்தனை
புரியாத கவி
எழுதி

கவி எழுதுகிற
சாக்கில்
கடமையைத்
தவற விடாது

கனவில் வாழ்ந்து
காரியமும் செய்து

நல்லவருக்குத் துணையாய்
நலிந்தோர்க்கு ஆதரவாய்

வாழும் அந்த சிறந்த கவி

பல் வரிசை தெரிந்திட
சிரித்து நாணி கோணி
நகைப்பூட்டி சில சமயம்
கோமாளித் தனம் கூட
செய்து நாளொன்றை
உற்சாகமாக நகர்த்துவான்

அனைத்து மணமும் ஒன்றே

தூய அன்பிற்கு
பிரிவு இல்லை
ஆழ்ந்த அன்புடன்
மௌனமாக நேசித்த
பழைய நண்பர்கள்
காணாமல் காண்கிறேன்

இன்றைய நாளில் வேறொருவரின்
ஒத்த குரலில் நண்பரின் குரல்
கேட்கிறேன்

இன்றைய நாளில் வேறொருவரின்
உருவத்தில் கூட
நண்பரைக் காண்பதில்
தடங்கல் இல்லை எனக்கு

ஆழமுடன் நேசிக்கத் தெரிந்த
என்னை நானும் ஆழமாக
நேசித்துக் கொள்கிறேன்

ஆழமுடன் நேசித்தால் கேடு ஒன்று
உண்டல்லவா? நேசிக்கப்பட்டவர்
உலகிலிருந்து பிரிந்து சென்றால்
மனம் பித்தாக மாறி விடுமோ?
கண்ணாடி போல உடையும்
மனத்தையும் படைத்து விட்டானே
ஆண்டவன்

நான் அந்நாட்களில்
நெல் வேகும் கணம்
உள்ளிழுத்த மணம்
நேசிக்கிறேன்

இன்று குடிக்கும் காப்பியின்
மணத்தில் கூட நெல் மணத்தைக்
காண்கிறேன்

நான் அந்நாட்களில்
கேட்டத் தவளை
சத்தத்தை இந்நாளில்
மின் சாதனம் எழுப்பும்
தொடர் ஒலியில் கேட்கிறேன்

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்
அனைத்து மணமும் ஒன்றே

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்
அனைத்து ஒலியும் ஒன்றே
அனைத்து ஒளியும் ஒன்றே

இவற்றை தியானத்தில் புரிந்து
கொண்டேன்.
என்னைப் பித்தன் என்றேனும்
சொல்லிக்கொள்.
பித்தம் தெளிந்த நான்
இனி எதற்கும் வருந்த மாட்டேன்

Sunday, December 19, 2010

திருந்தி விடு மனமே

சஞ்சலமும் சிரிப்பும்
கோபமும் கும்மாளமும்
கவலையும் களிப்பும்
அழுகையும் ஆனந்தமும்
குழப்பமும் குதூகலமும்
ஒன்றுக்கொன்று விட்டுக்
கொடுத்து நம் வாழ்க்கையை
அலங்கரிக்கின்றன

இது தெரிந்த பின்னும்
ஏன் அழுகிறாய்?
எதற்கு கலங்குகிறாய்?

மகனை இழந்த
தாயே சிறிது காலம்
சென்ற பின்
அமைதியுறும்போது
நீ மட்டும் எதற்காக
சிறியதற்கு எல்லாம்
மனம் சஞ்சலம் அடைகின்றாய்?

திருந்தி விடு
மனமே இன்றோடு
திருந்தாத காரணம்
ஒன்று இருந்தால்
அது உன்னை நீயே
வீழ்த்துவதற்கு
மட்டும் தான்

நினைவிற்கு எட்டிய நாட்கள்

தவளை மேல் கல் எறிந்தும்
தண்ணீரில் கப்பல் விட்டும்

ஓடிப் பிடித்து விளையாடியும்
ஓனான் விரட்டி அடித்தும்

வண்ணத்துப் பூச்சியைக் கட்டி விட்டும்
வண்டுகள் தேடி அலைந்தும்

மட்டைப் பந்து ஆடியும்
மர்மக் கதை படித்தும்

பட்டமொன்று விட்டுக் கொண்டும்
பள்ளம் தாண்டிப் பழகியும்

வேட்டுகள் வெடித்து ரசித்தும்
வேப்பம் பழம் தின்னு பார்த்தும்

வாதாங்கொட்டை உடைத்தும்
வாத்தியாரை கிண்டல் அடித்தும்

கில்லி ஆடி அளந்தும்
கிரிக்கெட் சிச்சர் அடித்தும்

பேப்பர் ராக்கெட் விட்டும்
பேப்பர் ராக் சிசெர்ஸ் ஆடியும்

நொண்டி நொண்டி பிடித்தும்
நெல்லிக்காய் வேட்டையாடியும்

கூழாங்கல் கூட்டியும்
கூர்காவை குழப்பியும்

கொடுக்காப்பள்ளி பறித்தும்
கொய்யக் காய் கடித்தும்

ஓடிச் சென்ற நாட்கள்
இன்று நினைவிற்கு
எட்டிய நாட்கள்

தந்தையின் மந்திரம்

தந்தை சொல்
மிக்க மந்திரம் இல்லை

தெய்வீக சிந்தனை
உனக்குள் புதைக்காதே

அவ்வைக்கு வாரிசாய்
முயற்சி செய்

கவலையும் கண்ணீரும்
இல்லை அவ்வைக்கு

கவியும் கவி பாடலும்
மட்டுமே உண்டு
அவ்வைக்கு

மந்திரம் அருளியது
தந்தை

யானை சொன்னது

கோவில் யானை
தும்பிக்கை
தலையில் வைத்தது

என்ன சொல்லி வைத்தது
புரிந்திருக்கவில்லை
அன்று எனக்கு

உன்னைத் தடுத்து
விளையாடுகிறேன்
பாரு

ஆனாலும் கவனித்துக்
கொள்வேன் அன்போடு
என்று தான் சொன்னதோ

யானையும் கடவுள்
அன்றோ?

இறைவன்

இறைவன் என்னை
அறைந்தார்

மறு கன்னத்தை
காட்டினேன்

என் சுகத்தை விட
மற்றவர் சுகம்
பெரிதென்று

அறைய மாட்டேன்
என்றென்றும் இனி
மற்றவராலே
சீர்படுவாய்
ஆசியிட்டார்
என்னை

இறைவா
நேரில் கண்டு விட்டேன்
உனை

கீதை சாரம்

மன உளைச்சல் மட்டுமே கண்ட
மனிதன் அவனையும்
முத்தாய் மாற்றிடுமே
கீதை சாரம்

சென்ற நாட்கள்
குதூகலிக்க மறந்தேனே
வரும் நினைவு அதனையும்
மகிழ்வுடன் ஏற்கும்
கீதை சாரம்

வெறுமையான கண்கள்
சூடிக் கொண்ட நாட்கள்
நல்ல நாளே என்பது
கீதை சாரம்

தூக்கம் கெட்ட நிலை
மாற்றும் பலம்
மாத்திரைக்கு அல்ல
மற்றவர் அன்பு
என்பது
கீதை சாரம்

படியுங்கள் அவசியம்
கீதை சாரம்

புத்திசாலி குழந்தை

நாளொன்றும் கெட்டிக்காரி
பத்து முறை சொன்னது அப்பா

நாளொன்றும் முட்டாள்
பத்து முறை சொல்வது
என் விடலைக் குழந்தை

வாழ்க்கைப் பாதையில்
தடம் புரண்டு போன
என்னை தடத்தில்
ஏற்றவே சொல்லும் புத்திசாலி
அவள் தான் என்
விடலைக் குழந்தை

Saturday, December 18, 2010

திண்டாட்டமா கொண்டாட்டமா

வீட்டைப் பார்த்து
வேலையைப் பார்த்து
குடும்பத்தினரைக்
கோபித்து
என்னம்மா
பிரயோஜனம்?

வாழ்வில்
அன்பும் பண்பும்
நிறைந்திருக்க வழி
சொல்லுகிறேன்
அம்மா தெரிஞ்சிக்கோ

வேலையிலும் சரி
வீட்டிலும் சரி
சுமாராக
ஒளிர்ந்தாலே போதும்
என்று நினைச்சுக்கோ

குற்ற உணர்வு தேவையில்லை
சமுதாய சூழ்நிலை என்று
அறிஞ்சுக்கோ

உனக்கென்று தினம்
தனி நேரம்
ஒதுக்கிக்கோ

தியானம் செய்ய
நேரம் பண்ணிக்கோ

உன்னை நீயே
நன்றாகப் புரிஞ்சுக்கோ

நீ நீயாக இருந்துக்கோ

நேற்றிரவு

நெஞ்சில் தலை புதைத்து
இதயத் துடிப்பினை எண்ணும்
காதோர விளையாட்டு
கற்றுக் கொடுத்து விட்டாய்

அணைக்கும் வேகத்தில்
காதலை அளக்க முடியாத
எல்லைக்கு ஏற்றி விட்டாய்

விருந்துக்குக்காக காதலா
காதலுக்காக விருந்தா
என்று திகைக்க விட்டாய்

கண் இமைக்கும் நேரத்தில்
காற்றும் நீருமாய்
உருவெடுத்தாய்

காந்தமொன்றை கற்பனையில்
செதுக்கி விட்டாய்

இரசவாதியாகலாம் வாருங்கள்

அவமதித்து நடத்தினாலும்
எரிச்சல் கோபம் கிளப்பினாலும்

காத்து வா கருணையுடன்
உணவுண்ண மறந்தவர்

துரதிர்ஷ்டம் இலக்கணமாக
இவரைப் பற்றிக் கொள்ள

உந்தன் கருணையும்
முடிவில் இவரை மாற்றிடவே

கிட்டுமே உனக்கு
இரசவாதி என்ற சான்றிதழ்

அவர் தான் அந்த மன நோயாளி

சுக்கிரனும் நானும்

பிறப்பு எடுத்ததோ பெண்ணாய்
எழுதலாமோ காதலை?

காதல் பெரிதாய்
காமம் சிறிதாய்த் தோன்றிடவே

விதைத்தான் எல்லாம் வல்ல இறைவன்
என்னை

என்ன வரம் வேண்டும் என்று
கேட்ட சுக்கிரனுக்கு

அளிக்கும் பதில் இதுவே
அளிக்கும் பதில் இதுவே

நிம்மதியுடன் வாழவிடு
உலகுக்கு உபயோகப்படும் வரை

எடுத்துக் காட்டு

தென்னங்கீற்றாய் வளைந்து கொடு
குடும்பத்தினரின் நன்மை காக்க

தன் சுகமா, பிறர் சுகமா
தகுந்த பதில் கேள்விக்கு
எதுவாயினும்
குடும்பத்தினரின் நன்மை
கேடடையாமால் காக்க

காப்பதனால் மட்டுமே
பெற்றிடுவது கோடி புண்ணியம்

நீயும் நின் குழந்தையும்
வாழும் அண்டை அயலார் கூட

Friday, December 17, 2010

தினசரி அம்சங்கள்

எழுந்ததும் பிராணயாமம், நல்ல ஆசனம், மற்றும்
தியானம் என்று பழக்கப் படுத்திக் கொண்டேன் பாப்பா

கால் கோப்பை காப்பி என்
சிற்றுண்டியின் கடைசிப் பகுதி பாப்பா

பின்னர் மூளைக்கு விருந்தாய்
பிரயாசமான வேலை பார்க்கிறேன் பாப்பா

உணவு இடைவெளியில் அளவளாவி
நட்பு கொண்டாடுகிறேன் பாப்பா

பணி இடைவெளியில் நிமிடங்கள் இருபது
வேக நடை உடற்பயிற்சி பாப்பா

உன் வாழ்விலும் அம்சங்கள் இது போன்று
அமைத்துக் கொள் பாப்பா

Thursday, December 16, 2010

மேல்நிலைப்பள்ளி

ஆசிரியையை கிண்டலடிக்கும்
மாணவர்கள்

நேர் கோட்டில் மட்டுமே நடக்கும்
தமிழ் ஆசிரியர்

தத்துவம் புகட்டும் இரசாயனம்
ஆசிரியர்

தாடியுடன்
உயிரியல் ஆசிரியர்

சன்னமாய்ப் பேசும்
இயற்பியல் வாத்தியார்

பேசிப் பேசி மகிழும்
மாணவ மணிகள்

திங்கட்கிழமை பாடிய
தமிழ்த் தாய் வாழ்த்து

கணீரென்ற
பள்ளி மணி

அகன்று விரிந்த
மைதானம்

இத்தனையும் கொண்டதாம்
எங்கள் மேல்நிலைப்பள்ளி.

மலைக்கோட்டை

திருச்சி மாநகரின் மையத்தில்
பிள்ளையாரின் பேரருள் பரவும் கோலத்தில்
மெய்மறந்து தரிசிக்கும் நேரத்தில்

நான் வாங்கித் தந்த பூவை
பிள்ளையாருக்கு சாற்றும் நேரத்தில்

பால் அபிஷேகம் காணும் நேரத்தில்
சூடம் காட்டும் தருணத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

பின்னர் சிதறு தேங்காய்
உடைந்த சத்தத்தில்

சிதைந்த சில்லுகளைப்
பொறுக்கும் வேகத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

யானைப் பாதை தன்னில்
விரையும் நேரத்தில்

பின்னர் செங்குத்துப் படியில்
அடியெடுத்து ஏறும் தருணத்தில்

உச்சிப் பிள்ளையார் தரிசிக்கும்
நேரத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

இறங்கி வந்து காவிரி ஆறு
நோக்கும் நேரத்தில்

திருச்சி மாநகரை ஒருசேரக்
காணும் நேரத்தில்

பிரசாதம் சாப்பிட்டு பாறையில்
விளையாடும் தருணத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

மலைக்கோட்டைப் பிள்ளையார் இன்று
எனக்கு திருச்சியில் மட்டும் இல்லை

மலைக்கோட்டைப் பிள்ளையார் இன்று
எனக்குத் திருச்சியில் மட்டும் இல்லை

என்றும் எப்பொழுதும்
உறைகின்றார் நெஞ்சினில்

கலங்காத உயிர்

ஆரம்பப் பள்ளிக்கான சைக்கிள் சவாரி
பின்னர் அடுத்தடுத்து வந்த வருடங்களில்

பள்ளம் தாண்டி தாண்டி
பள்ளிக்கு விரைந்த
அனுபவம்

விவீட்பாரதியில் எஸ் பீ பீ பாடல்கள்
தேன் போல் காதில் ஒலிக்க
பள்ளிக்கு பறந்த
அனுபவம்

சேற்றிலே வழுக்காமல் கால்களை முன்னேற்றி
கலங்காமல் பள்ளிக்குச் சென்ற தைரியம்

முழங்கால் அளவு தண்ணீருக்குள்ளும்
தயங்காமல் வழி தடத்தைக் கண்டு கொண்ட சாதுரியம்

பரீட்சை நாள் காலை தேசப் படம் ஒன்றை
கடையிலிருந்து காசு கொடுத்து களவாடிக் கொள்ளும் பழக்கம்

வீட்டில் இன்க் இருந்தும் எதற்காகவோ
கடையில் பேனாவிற்கு இன்க் ஊற்றும் பழக்கம்

பள்ளி தொடங்கும் நாட்களில்
பிரில்-இன்க் லேபல்களை
பரவசத்துடன் சேகரித்துக் கொள்ளும் பழக்கம்

மாலையில் வீடு திரும்பும் நேரம்
கறி காய் வாங்கி பழக்கடையிலிருந்து
வரும் பழ வாசத்தை உள்ளிளுத்ததன் நினைவு

பாலம் இருக்க செருப்பை கையிலெடுத்து
ஆலைக் கழிவு ஓடைக்குள் இறங்கி
அக்கறை செல்லும் சேட்டை

அண்ணன் ஒருவன் சைக்கிள் வித்தை செய்து
வீடு திரும்புவதை வேடிக்கை கண்ட நினைவு

இத்தனையும் நான் ஒரு சாதுரியமான சிறுமி
என்றே நினைவுபடுத்துகிறது

சிறுமியாக இருந்தபொழுது கலங்காத உயிர்
இன்று வளர்ந்து ஆளான பின் பல சமயம்
மனம் கலங்கும் மாயமும் என்னவோ?

வருகுது அம்மா நினைவு

பாயசம் சப்பினேன் பாப்பாவாக
பஞ்சு மிட்டாய் பார்த்திடவே
பத்து முறை கெஞ்சினேன் வாங்கித் தர

பத்து பத்தாய் சாப்பிட்டேன் பகோடாக்கள்
பல முறை ரசித்தேன் அல்வாவை

பரோட்டா தின்னப் பழகினேன் பின்னாலே
பால் மட்டும் தொடர்ந்து குடித்தேன்

பாகற்காய் தின்னப் பழகினேன் பின்னாலே
பழங்களைச் சாப்பிட்டேன் பழமுதிர் சோலையிலே

பாஸ்தாவும் தின்னப் பழகினேன் பின்னாலே
பேப்பர் பிளேட்டில் சாப்பிடுகிறேன் இந்நாளில்

பரக்கப் பரக்க சாப்பிட்டேன் சில வருடம்
பாதி மட்டும் சாப்பிட்டேன் சில வருடம்

சாப்பிட்டது எத்தனை விதம்
நினைக்கவில்லை அம்மாவை
சாப்பிடும் தருணம்

நல்ல பொழுதும் விடிந்தது இன்றெனக்கு
வருகுது அம்மா நினைவு
சிற்றுண்டி சாப்பிடும் வேளையிலே

Wednesday, December 15, 2010

உழைக்கும் மனங்கள்

ஏன் வந்ததோ?
கம்ப்யூட்டர் முன் கட்டாயமாக உட்கார வேண்டிய நிலை

என்ன விளைவு மூளை இடது பக்கமே உபயோகித்து ?

மறந்து விடுகிறது, மறுத்து விடுகிறது கண் மற்றவிரடம் பேச

சிட்டாய்ப் பறக்க வேண்டிய கால்கள் கணம் ஒன்றும்
கட்டப் பட்டு விட்டது கம்ப்யூட்டர் நாற்காலியில்

கால்கள் பல பத்தாண்டுகள் கட்டப் பட்டு விட்டது
சூறையாடி விட்டது சக்திமான் தோற்றத்தையே

விடுபடத் துடிக்கிறேன் இவற்றிலிருந்து
பணியில் நட்புக்கு இடம் கொடுத்து
தேற்றிக் கொள்ளும் என் போல் மானிடர்கள்
எவர் இருப்பினும் கேளுங்கள்

உழைக்கும் கரங்கள் என்று சொல்வதற்கு பதில்
உழைக்கும் மனங்கள் என்றே சொல்லுவோம்

இல்லாதது நினைப்பேல்

காதலில் மட்டுமா இன்பம்
தொலைத்து விட்டப் பள்ளித் தோழர்களை
திரும்பப் பெறுவது இன்பம்

காமத்தில் மட்டுமா இன்பம்
கவி எழுதுவது இன்பம்

மைசூர்-பாக்கில் மட்டுமா இன்பம்
தியானம் செய்து
பரவசம் அடைவது இன்பம்

கண் பேசுவதில் மட்டுமா இன்பம்
கலை ரசிப்பதில் இன்பம்

இது தான் இன்பம் என்று
சொல்வதற்கு எதுவும் இல்லை

இன்பம் மனதில் உதிக்கிறது
இன்பம் உணர்வில் கலக்கிறது

இல்லாதது நினைத்து வருந்தாதே
இருப்பதை நினைத்து களிப்புறு
இருப்பதை நினைத்து அமைதி கொள்ளு

கண்ணன் முகம் கண்ட கண்கள்

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை

தூய அன்பு கொண்ட பெண் அவள்
கண்ணனை காண்பாளே எவரிடத்தும்

கண்ணனுக்குத் தந்த உள்ளத்தை
தருவாளே பிறருக்கும்

Monday, December 13, 2010

பொங்கல் தினத்தன்று

முந்தைய நாள் மனையெங்கும் ஆசையுடன்
மாக் கோலமிட்ட அந்தக் காலம்

பொழுது விடியும் முன் தயங்காமல் எழுந்து
காலைப் பனியில் வீட்டு வாயிலில்
மார்கழிப் பனியோடு போட்டியிட்ட
தை முதல் நாள் பனியில்
முக்காடிட்டு அமர்ந்த அந்த நாள்

பசுவின் சாணத்தை சந்தோஷமாகத் தெளித்து
தரையை சுயமாகச் சாயமிட்டு பெருமிதம்
அடைந்த அந்த நாள்

வண்ணப் பொடிகளைப் பரப்பி வைத்து
கோலத்தின் தலைப் பாகம் சிவப்பா பச்சையா
என்று உடன்பிறந்தாரோடு கலந்து உரையாடி
உவப்போடு கோலமிட்ட அந்த நாள்

பின்னர் ஸ்நானம் செய்து பிறகு அப்பா சூடம் காட்டும்
பாணியை பக்கமிருந்து வேடிக்கை கண்டு
பொங்கல் ப்ராசதத்தில் கடவுள் அருள் நிறைய இருப்பதாக
முழுமையாக நம்பி அதன் சுவை, மணம் இரண்டையும்
ஒன்று கூட்டி உயிருணர்வோடுடன் இணைத்த
அந்த நாள்

பூஜை அறையை ஆக்கிரமித்த அந்த ஊதுவத்திப் புகையில்
மெய்மறந்து அந்த வாசம் மூளையின் ஓரச் சதையில்
புதைந்து விட்டது என்று அறிந்திராமலே பூஜை அறையை
விட்டு வெளியே வந்த அந்த நாள்

வீட்டுக் கூடத்தில் கரும்பு சீவித் தந்த
சித்தப்பனை நன்றியோடு நோக்கி
துண்டம் செய்து தரும் அம்மாவை
பக்தியுடன் வேடிக்கை பார்த்த அந்த நாள்

கணுவைக் கடிக்க முடியாமல் தவித்து
அண்ணனால் என்னை விட வேகமாகச்
சாப்பிட முடியுதே என்று கலங்கிய
அந்த நாள்

பொங்கல் நாளாம் நன்னாளாம்
என்றும் மனதை விட்டு அகலா
நன்னாளாம்

பண்டிகைக்கு இவ்வளவு பலம் உள்ளது
என்பதை வாழ்வின் பிற்பகுதியில்
துல்லியாமாகக் காண்கிறேன்
உங்களோடு பகிர்கிறேன்

Sunday, December 12, 2010

விலங்கும் தோழனே

சல் சல் என்ற மணியின் சத்தம் இசை பாட
குதிரை தன வாலை நம் மீது தடவி விட

வண்டி குலுங்கி குலுங்கி ஆட்டம் போட,
ஒருவர் இறங்கினால் தடம் புரண்டது போல் தோண

போர் அடித்தால் நிலைக் கண்ணாடியோடு விளையாட
சவுக்கடிக்காக குதிரைக்காக மனம் உருக

குதிரை வண்டிக்கென்ற தனி மணத்துடன்
இயற்கையின் அதிசயத்தைக் கண்டு களித்த

நாட்கள் அன்று. இந்த நாட்கள் அன்று போல்
எளிமையாக இல்லையே

பழமையும் பெருமையே
விலங்கும் தோழனே

ஆசிரியர் இலக்கணங்கள்

வேட்டியும் அணிந்து வந்தனர்
காண்போமோ இன்று?

ஒரு சில நாளில் பாட்டும் பாடினர்
பாடுவரோ இன்று?

குசேலர் கதையும் கூறினர்
கூறுவரோ இன்று?

ஸ்கேலில் அடித்தும் இருக்கின்றனர்
அடிப்பாரோ இன்று (அமெரிக்காவில்)

சாக்பீஸ் மட்டுமே கண்டனர்
கம்ப்யூட்டர் கண்டனரோ அன்று?

வகுப்பில் நிசப்தம் அமைத்தனர்
பேக்ரௌந்து நாய்ஸ் கண்டனரோ அன்று?

வீட்டு உணவேக் கொண்டனர்
காண்டீன் கண்டனரோ அன்று

காலமும் மாறியது
இவர்களும் மாறினர்

மாறாதது ஒன்று உண்டன்றோ?
அது தான் மலரும் நினைவுகள்

அந்த நாள் ஆசிரியரின்
இலக்கணங்கள்

இட்லி போய் பாஸ்தா வந்தது டும் டும் டும்

இட்லி சட்னி சுவையோ தனி
பாட்டி வீட்டு தோசையின் மணமோ தனி

இன்று 2010 இல் சமையல் ரகமோ தனி
அம்மா அப்பா இட்லி சாப்பிடுவார்கள்

எனக்குப் பிடித்ததோ பிஸ்ஸாவும் பாஸ்தாவும்
என்றே குழந்தைகள் சொல்கிறார்கள்

Wednesday, December 8, 2010

தியேட்டருக்குள்

தியேட்டருக்குள் ஆடலுடன் பாடல்
இருதயத்தில் துடித்தல்

தியேட்டருக்குள் ஆடலுடன் பாடல்
எவரின் மனதிலும் துள்ளல்

தியேட்டருக்குள் கதாநாயகன் கதாநாயகி
கற்பனையும் நிஜமும் கலந்த எண்ண ஓட்டங்கள்

தியேட்டருக்குள் கதாநாயகன் கதாநாயகி
காண்பதை முழுமையாக ரசிக்கும் அந்த கணங்கள்

இத்தனை இருந்தும் தியேட்டருக்கு
செல்லாத சில மனித மனங்கள்

கம்ப்யூட்டருக்கு அடிமையான இந்த மனங்கள்
பல நேரங்களில் கம்ப்யூட்டர்
சில நேரங்களில் தியேட்டர் என்று

காலத்தைத் தள்ளும் காலம் இது
இருப்பினும் சினிமாவைப் பிரசவித்த
எடிசனுக்கு கூட்டத்தோடு கும்பிடு போடு!

பார்வை

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆடவர் கண்ணுக்கு எந்த
ஒரு பெண்ணும் எவ்விதம்?

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

என்று சொன்ன கண்ணதாசன்
பெண்ணின் மனம் அறிந்ததில்லை

கல்லூரி நாளில் கண்டு கண்டு
களித்த நந்தவனத்து மலர்கள்

இன்று காணாமல் போயின
என்று எவன் சொன்னது?

பெண்கள் இல்லாத இடம்
பாலை வனம் என்று தானே
அவன் சொன்னான்

மகளிர் கல்லூரியில் மிரண்டு போகும்
அந்த ஒரே ஒரு ஆண் வாத்தியாரும்
அமிர்தம் என்று தானே அவள் சொன்னாள்

ஆண் பார்வை, பெண் பார்வை என்றப்
பிரிவினை இல்லை இங்கு

பார்வைக்கு என்றும் பஞ்சம் இல்லை
பார்வைக்கு என்றும் பஞ்சம் இல்லை